Saturday, July 31, 2010

இசை விமர்சனம் - கொஞ்சம் பெரிய முன் குறிப்பு

இனி வரும் இசை சம்பந்தப்பட்ட பதிவுகள் விமர்சனம் அல்ல. ரசனைப் பகிர்தல் என்று சொல்லலாம். பொதுவாகவே திரைப்படங்களைப் பற்றி பேசும் அளவுக்கு, இங்கே இசையைப் பற்றி நான் பேசுவதில்லை. பிடித்த, பிடிக்காத இசையைப் பற்றி விவரிக்க, சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருப்பதே பொதுவான காரணம். பயன்படுத்தும் ஓரிரு வார்த்தைகளும், அனேக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, படிக்கும்போது, எனக்கே புதியதாக இருக்காது. இப்படி பல இசைப் பற்றிய பதிவுகள் எழுதி, அதை அழித்திருக்கிறேன். எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பது. போரடித்தாலும், படிப்பவர்கள் படிக்கட்டும் என்று இப்போது துணிந்துவிட்டேன். யார் வேண்டுமானாலும் இசையை விமர்சனம் செய்யலாம் என்ற நிலையில், என்னுடைய இந்தப் பதிவுகளை விமர்சனம் என்று கூற விரும்பவில்லை. என் இசை அறிவுக்கு எட்டிய விஷயங்களை, என் ரசனையைப் பொருத்து, அதைப்  பதிவு செய்கிறேன். இதில் கண்டிப்பாக உங்கள் ரசனைக்கு மாறான கருத்துக்கள் இருக்கும். எனவே, தேவையில்லாமல் விவாதித்து அலட்டிக்கொள்ளாதீர்கள்.

இவ்வளவு பெரிய முன்குறிப்புக்கு அவசியமில்லைதான். இருந்தாலும் எழுத ஒரு விஷயம் கிடைத்து விட்டதல்லவா. விட்டு விட மனமில்லை. இசையைப் பற்றி நான் பேசுவதற்கான காரணம், (ஒரு சின்ன தம்பட்டம்) நான் ஒரு பாடகன். முறையான சங்கீதம் கற்றிருக்கிறேன். சில பல காரணங்களால் தொடர முடியவில்லை. தொடருவதற்கு எண்ணங்கள் இருக்கின்றன. இசையைப் பற்றிய பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இருக்கிறது. இன்றும் பல்வேறு மேடைகளில் பாடிக்கொண்டிருக்கிறேன். இது போதுமென நினைக்கிறேன் :P

இந்தத் தருணத்தில், நண்பர் அகிலன், வல்லினத்தில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையிலிருந்து சில வார்த்தைகள், "இசையோடு வருபவர்களை காட்டிலும் சினிமா கனவோடு வருபவர்கள்தான் அதிகம். ஒன்றை கண்டிப்பாக நம்புங்கள். சினிமா இசையின் காலம் முடிந்து விட்டது அதன் கடந்த கால வெற்றிகளில்தான் பலரும் அதன் ஆயுளை நீட்டி வருகிறார்கள். புதிய இசைகளுக்கான வாய்ப்புகள் விஸ்தாரமாக இருக்கிறது. அவைகளுக்கான தளம் சினிமா அல்ல. அப்படி வலிய முயற்சிக்கும் போது கார்த்திக்ராஜாவின் அச்சமுண்டு அச்சமுண்டு இசைபோலவோ அல்லது உன்னைப் போல் ஒருவன் இசைப்போலவோ யாராலும் கவனிக்கப்படாமல் போகும். சினிமாவில் இசை கவனிக்கப்படுவது இல்லை. எந்த சினிமா விமர்சனமும் இசையை பொருட்படுத்தியதும் இல்லை" - உன்னைப்போல் ஒருவனைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்த்து, வழிமொழிகிறேன்.

சரி, அடுத்த பதிவிலிருந்து வேலையை ஆரம்பிக்கிறேன்.

Friday, July 23, 2010

ப்ளேலிஸ்ட் - மே, ஜூன்

போன ப்ளேலிஸ்ட் --> இங்க

இந்த ஒண்ணரை மாசத்துல நெறைய படங்களும், பாடல்களும் வந்தாலும், வழக்கம் போல ஒண்ணு ரெண்டு தான் ப்ளேலிஸ்டுக்கு தேறிச்சு. இன்னும் புது லிஸ்ட்ல இருக்கற போன லிஸ்ட்டு பாடல்கள் என்னென்னா,
என் காதல் சொல்ல - பையா,
என் நெஞ்சில் - பாணா,
ஆரோமலே - வி,தா.வி,
பெஹேனே தே (உசுரே போகுதே) - ராவண்(ணன்)

இந்த லிஸ்ட்டுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம்.
நம்ம சின்ன தல யுவன், குறைஞ்ச இடைவேளைல, அடுத்தடுத்து படமா மியூசிக் போட்டு தள்ளுறாரு. இது கண்டிப்பா அவரோட பாடல்கள்ல இருக்கற தரத்தை பாதிக்குது. சமீபத்துல, அடுத்தடுத்து வந்த தில்லாலங்கடி, நான் மகான் அல்ல படப் பாடல்கள், அவ்வளவா ஒண்ணும் மெய் சிலிர்க்க வெக்கலன்னாலும், பெருசா ஒண்ணும் கேட்கவும் வெக்கலை. சீக்கரம் திருந்தினா சரி... இப்போ பாடல்கள்,

மு.கு - எல்லா பாடல்களும் லிங்க் குடுத்துருக்கேன். க்ளிக்கிட்டு, ராகா.காம்ல வர அட்வேர்டைஸ்மென்ட கொஞ்சம் பொறுத்துகிட்டு, பாடலை பொறுமையா கேளுங்க..

தாக்குதே - பாணா
போன லிஸ்ட் போடும் போதே, நம்ம வாணி மேடம், இந்தப் பாடலைப் பற்றி பின்னூட்டத்துல குறிப்பிட்டிருந்தாங்க. நல்ல catchy ரிதம் இருக்கற, யுவன் ஷங்கர் மட்டுமே பாடக்கூடிய பாடல். அவரோட குரல்ல ஒரு வலியும், சின்ன புள்ளைத்தனமும் இருக்கு. 

ஆனந்தபுரத்து வீடு படப் பாடல்கள் எல்லாமே, எனக்குப் புடிச்ச வசந்தா ராகத்துல அமைஞ்சிருக்கு. ரொம்ப சூப்பரா இல்லைனாலும், ஒரு புது முயற்சி. பாடல்களும் கேட்கும்படியவே வித்தியாசமா இருக்கு. முயற்சி பண்ணிப்  பாருங்களேன்.

மதராச பட்டினம் - பூக்கள் பூக்கும் தருணம், ஆருயிரே, வாம்மா துரையம்மா
இந்த படத்துக்கு, பாடல்கள் பெரிய வேகத்தடையா இருந்தாலும், தனிச்சு நிக்கும்போது நல்லாவே இருக்கு. இதுல, பூக்கள் பூக்கும் தருணம் பாடலோட முதல் "தான தோம் த ந ந " எங்கயோ கேட்டா மாதிரியே இருக்கு. ஆருயிரே பாடல், "எனக்கு 20..." படத்துல வர 'ஏதொ ஏதொ ஒன்று' பாடலை நியாபகப்படுத்துது. வாம்மா துரையம்மா, நல்ல லிரிக்ஸ். அதுவும், தமிழோட பெருமையா உதித் நாராயணன் பாடி கேட்கும்போது, டாபர் ஹனி வந்து பாயுது.

பலே பாண்டியா - இந்த படத்துக்கு மியூசிக், வித்தியாசமான குரல்ல இவ்வளவு நாளா பாடிகிட்டு இருந்த 'தேவன்'. இதுல "சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்"னு ஒரு பாடல். முடிவு கொஞ்சம் சொதப்பல், இருந்தாலும், அந்த சொதப்பல் வரை நல்லா இருக்கு.



வழக்கம் போல, இந்தப் பாடலும் எனக்கு, நம்ம ராஜா சாரோட சில பாடல்கள நியாபகப்படுத்த, ஆரம்பிச்சேன் என் ஆராய்ச்சிய. இந்தப் பாடல் அமைஞ்ச ராகத்தோட பேரு "ஜோக்" (joke இல்ல JOG). இதுல நம்ம ராஜா போட்ட சில பாடல்கள், "காலம் காலமாக வாழும்" - புன்னகை மன்னன் மற்றும் "பேய்களை நம்பாதே" - மகாநதி ஆகியன.

நீங்களும் கேட்டு பலனடைங்கோ. வர்டா...
பி.கு. - ரகுமானோட புலி படப் பாடல்களைப் பற்றி, அடுத்த  பதிவுல எழுதறேன்..

Friday, July 2, 2010

டாய் ஸ்டோரி 3 (பத்தி விமர்சனம்)

மு.கு. படத்தோட கதையை பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். சரின்னா தொடர்ந்து படிங்க...

பிக்ஸாரின் ஒவ்வொரு படம் வரும்போதும் கேட்கற வழக்கமான கேள்விதான் இந்தப் படம் முடிஞ்ச அப்பறமும் கேட்கத் தோணுது.

"இத விட அருமையான படம் எப்படி கொடுக்க முடியும்???"

இன்னொரு முறை, அனிமேஷன் படங்கள் எடுக்கறதுல, அவங்களுக்கு நிகர் அவங்களேதான்னு நிரூபிச்சுருக்காங்க. கதைக்களம், கதையோட ஓட்டம்னு  எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நம்மால யூகிக்க முடியாத மாதிரி இருக்கு. ஒரு வினாடி கூட வீணடிக்காம, மக்களோட மூளைக்கும், மனசுக்கும், ஒரே சமயத்துல வேலை கொடுத்து பிரமாதமா, ரொம்பத் தெளிவா திரைக்கதை அமைச்சிருக்காங்க. ரொம்ப நுணுக்கமான விஷயங்கள்லேர்ந்து, பிரம்மாண்டமான விஷயங்கள் வரைக்கும், செதுக்கிருக்காங்க. அந்த உழைப்பு, படத்தோட ஒவ்வொரு இடத்துலையும் தெரியுது. ஒரே ஒரு பிரச்னை என்னன்னா, இந்த படத்துக்கு 3d பெரிய வித்தியாசத்தை கொடுத்திடலை. ஏதொ சம்பிரதாயத்துக்கு 3dனு ரிலீஸ் பண்ணிருப்பாங்க போல. ஆனா இதை விடுங்க. இந்த மாதிரி படங்கள் வர்றதே ரொம்ப கஷ்டம். மொழி புரியலைனாலும் கண்டிப்பா பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.