Sunday, August 17, 2014

'எடை'யப்பா


ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் இயந்தரங்களின் மேல், சிறு வயது முதலே எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஈர்ப்பு. இன்று வரை அதன் தொழில்நுட்பம் புரியாமல் இருப்பதால், இன்று வரை அதன் மீதான சுவாரசியமும் குறையவில்லை. பல முறை எடை பார்த்திருக்கிறேன். காலுக்கு கீழே வைத்துப் பார்க்கும் சிறிய அளவிலான எடை பார்க்கும் இயந்திரமாக இருந்தாலும் விட்டதில்லை. ஏறி நின்று (எடை) பார்த்து விட்டுதான் மறுவேலை. 

என்றுமே எடையைக் கூட்டவோ, குறைக்கவோ பெரிய அளவில் நான் முயற்சி செய்ததில்லை. சிறு வயது முதலே ஒல்லியான தோற்றம் என்பதால், அவ்வபோது பாதாம் ட்ரிங், பால், தேன், pedia sure, complan என பல கட்டங்களைத் தாண்டி, நிச்சயமாக எதுவும் தேறாது என முடிவுசெய்து முயற்சிகளை கைவிட்டேன். ஆனாலும் அவ்வபோது எடை பார்த்து, அந்த நொடிக்கு மட்டும் வருத்தமடைந்த சந்தர்ப்பங்கள் வந்தன. முதுகலையில் சேரும்போதும் 49 கிலோ மட்டுமே இருந்தேன். முடியும் போது 52. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் என்ன ஆனதோ தெரியவில்லை, 10 கிலோ வரை ஏறினேன். "ஒரு வழியா டீசண்டான வெயிட் வந்துட்டோம்" என மனதில் தோன்றியதால், முன்பு போல எடை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

பெசண்ட் நகரில் முருகன் இட்லி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். எடை பார்த்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்ததால், அங்கிருக்கும் எடை பார்க்கும் நவீன இயந்திரத்தைப் பார்த்தவுடன், காலும் கையும் குறுகுறுக, ஆசை பீறிட, சில்லறை கடன் வாங்கிக் கொண்டு, இயந்திரத்தில் நின்றேன். 76.3 என வர, என் இதயம் ஒரு முறை நின்றது. அதற்கு முக்கியக் காரணம், சில மாதங்கள் முன்பு நான் இதை விட 10 கிலோ குறைவாக இருந்தேன். 

ஒரு காலத்தில் நான் 50 கிலோ வருவதற்கே அரும்பாடு பட்டுள்ளேன். வேலைக்கு போக ஆரம்பித்த பின், தானாக, இயற்கையாக எடை கூடியதால், பெரிதாக கவலைப் பட்டதில்லை. ஆனால், ஒரேடியாக இந்த 10 கிலோ ஏற்றத்தை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் சில்லைற மாற்றி, மீண்டும் முயற்சித்தேன், இம்முறை 77. 

நின்று போன இதயம் வெடித்தது. கண்கள் கண்ட காட்சியை, மூளை ஏற்க மறுத்தது. நண்பர்களிடம் புலம்பிவிட்டு, வீட்டிற்கு வந்தேன். பேச்சு வாக்கில் அப்பாவிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி ஆனார். தலைக்கனத்தினால் உடல் எடை உயர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை. அதனால் அப்பாவுக்கும் குழப்பம். "எக்சர்சைஸ் பண்ணு. இவ்ளோ இருக்க கூடாது. வீட்ல எதாவது வேலை செஞ்சாதான" என்று அவர் பங்கிற்கு ஏற்றிவிட, மேலும் கடுப்பானேன். வழக்கம் போல அம்மா மட்டுமே, இந்த வயதிற்கு இது சரியான எடை தான். கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் சொன்னார். ஆனால் மனம் ஆறவில்லை. எப்படி 10 கிலோ, எப்படி 10 கிலோ என அதீதமான யோசனை.

சில நாட்களுக்கு முன காதி கிராப்ட் கடையில் இருக்கும் இயந்திரத்தில் எடை பார்த்தேன். பழைய எடையான 67-ஐ காண்பித்தது. அபோதுதான் மனதின் பாரமும் இறங்கியது. மு.இ.கடையில் இருக்கும் இயந்திரம் கோளாறு என முடிவு செய்தேன். இப்போது ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. நீங்கள் யாரும் மு.இ. கடை இயந்திரத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வாழ்க அரசாங்க இயந்திரம் !!

Saturday, August 16, 2014

மற்றும் பல - 16/08/2014


Writers Block, சோம்பேறித்தனம், மெத்தனம் இதில் எது என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. தோன்றவில்லை, அதனால் எழுதவில்லை. இதுவே காரணம்.
ஏன் தோன்றவில்லை?
ஒரு வேளை நான் மந்தமாகிவிட்டேனோ என்னவோ. என் பழைய பதிவுகளைப் பார்க்கும்போது ஏதோ வாழ்ந்து கெட்ட குடும்பம் போல தோன்றுகிறது. முன்பெல்லாம் அவ்வபோது ஏதோ ஒன்றை எழுதி வந்துள்ளேன். ஆரம்பித்த வருடத்தில் 59, அடுத்த வருடம் 58, அடுத்து 36 என பதிவுகளின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 2+ வருடங்களாக நான் எழுதிய பதிவுகள் மொத்தமே 10 தான். எழுதும் ஆர்வம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது இங்கே எதிரொலிப்பது இல்லை. இனிமேல் நமக்கு முன்பு போல் எழுதவே வராதோ என்று கூட பயம் வருகிறது. மேலும் மேலும் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வழக்கம் போல எழுதாமல் விடவேண்டாம் என்பதால், இதோ. எங்காவது உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

-----------------------------------------------------------------------


பல நாட்கள் கழித்து ஒரு முழுமையான மாஸ் பட அனுபவத்தை வேலையில்ல பட்டதாரி தந்தது. என் நினைவுக்கு எட்டிய வரை, கடைசியாக தூள் திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த உணர்வு இருந்தது. தேவியில், மொத்த அரங்கமே கொண்டாடிய படம் அது. அந்த அனுபவத்திற்காகவே அங்கு மேலும் இரண்டு முறை பார்த்தேன். அப்படித்தான் இருந்தது வே. ப. படத்தின் பாடல்கள் வந்த நாள் முதல் ஒட்டிக்கொண்டு விட்டது. படமும் அப்படியே. இன்று திரைப்படம் என் போன்ற ரசிகர்களினால் 50 கோடியை தாண்டியுள்ளது. harmless entertainment. ஜெயிப்பதில் மகிழ்ச்சியே. முக்கியமான ஒரு சம்பவம். படத்தில் ஒரு கெட்ட வார்த்தை வரும்போது, புரிந்து கொண்டு, நானும், தியேட்டரில் மிகச் சிலருமே கைதட்டிய போது, இந்தியா கூடிய விரைவில் வல்லரசாகிவிடும் என்று தோன்றியது. 


-----------------------------------------------------------------------


எப்படி வே.ப பார்க்கும்போது தூள் நினைவிற்கு வந்ததோ, அதே போல ஜிகர்தண்டா பார்க்கும்போது சூது கவ்வும் நினைவிற்கு வந்தது. இரண்டு படங்களுமே முற்றிலும் புதுமையான ஒரு அனுபவத்தைத் அரங்கில் இருப்பவர்களுக்கு தந்தன. தமிழ் திரைக்கு புதிய விஷயங்களைத் தந்தன. டேர்டி கார்னிவல் படத்தின் காப்பி என வதந்தி உலவியதால், முதலிலேயே அந்தப் படத்தை பார்த்து விட்டேன். ஆனால் ஜிகர்தண்டா பார்க்குபோது அப்படி எந்த ஒரு அம்சமும் ஒத்துப் போகவில்லை. படம் தந்த பிரம்மிப்பில் பல விஷயங்களை சரியாக கவனிக்கவில்லை. மீண்டும் அரங்கில் பார்க்க வேண்டும். 


-----------------------------------------------------------------------


கடந்த சில மாதங்களில் வெளியான எந்தப் பாடல்களும் சகிக்கவில்லையே. என்ன காரணம்? 


-----------------------------------------------------------------------


 அஞ்சான் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் கிடைத்தலும் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். ட்ரெய்லர் தந்த பயம் அப்படி. இன்று படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பிறகு, "கடவுள் இருக்கான் குமாரு" என்று தோன்றியது. ஏன் இந்தப் படம் ஓடக் கூடாது என நினைத்தேன் என்று தெரியவில்லை. படத்தின் விளம்பரங்களிலிருந்தே ஒரு விதமான திமிர் தெரிந்தது. அதீதமான நம்பிக்கை அல்ல. திமிர் மட்டுமே. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. இனி நமது கோலிவுட் மகான்கள் இந்த கமெர்ஷியல் கடுப்புகளைக் கட்டி அழ மாட்டார்கள் என ரசிகர்கள் சிலர் நினைக்கின்றனர். இந்த ஊரில் தான் குருவி, வில்லு, சுறா, ஜில்லா, பட்டத்து யானை, அலெக்ஸ் பாண்டியன், ஏகன், பழனி போன்ற படங்களை எடுத்து, ஊமைக் குத்தாக வாங்கி, வைத்தியம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களா அஞ்சானிலிருந்து தெரிந்து கொள்வார்கள்? ஆயிரம் ஜிகர்தண்டா வந்தாலும் சிலர், அப்படித்தான். 


-----------------------------------------------------------------------


ராஜாவின் நல்ல பாடல்களைப் பகிர்ந்து பல காலம் ஆகிறது. இந்தப் பாடல் தெலுங்கில் 'மரண மிருதங்கம்' என்ற திரைப்படத்திலிருந்து. பாடலில் ஏதோ ஒரு mystery இருப்பது போல தோன்றுகிறது. அதுவே பாடலை (எனக்கு) சுவாரசியமாக்குகிறது. பொதுவாக தெலுங்கு பாடல்களை நான் பார்ப்பதில்லை. அதைப் பார்த்து விட்டு பாடல் பிடிக்காம போய்விட்டால்? இதையும் அப்படியே. பி. சுசீலா, எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல், இதோ... 






Wednesday, May 14, 2014

நான் எவ்வளவு பெரிய முட்டாள்???

நிறைய யோசிப்பவர்கள் நிறைய கோட்டை விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்ததுண்டு. ஊரே, "ஆஹா, என்ன அறிவாளிப்பா நீ.. உன்ன மாதிரி ஒரு புள்ள கெடைக்குமா" என்று போற்றப்படும் ஆட்கள் எல்லாம் கண்டிப்பாக சில்லித்தனமான முறையில் தங்களது முட்டாள்தனத்தை காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவமும், ஒரு கதையும் கைவசம் உள்ளது. முதலில் கதை

பிரபலமான விஞ்ஞானி ஒருவர் தனது ஆராய்ச்சிக் கூடத்தில் அடிக்கடி இரண்டு பூனைகள் வந்து செல்வதைக் கண்டார். பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலும் சில தொல்லைகளை பொருத்துக் கொள்ள முடியாதோ என்னவோ. பெரியது ஒன்று, சிறியது ஒன்று என அந்தப் பூனைகள் போடும் அட்டாகசங்கள் தாள முடியவில்லை. முக்கியமாக அவை கூடத்திற்குள் வர முயற்சிக்கும்போது ஏற்படுத்தும் சேதாரங்களே அதிகம். அவற்றை விரட்ட முடியவில்லை என்பதால், உள்ளே வருவதில் தானே பிரச்சனை, அதற்கு ஒரு வழி செய்யலாம் என முடிவு செய்து, தனது கூடத்தின் கதவில் ஓட்டை போட முடிவு செய்தார்.

பெரிய பூனைக்கு பெரிய ஓட்டையும், சிறிய பூனைக்கு சிறிய ஓட்டையும் !!!!!

படித்ததும் புரிந்தவர்கள், சிறிது யோசித்து "அட" என நினைத்து புரிந்தவர்கள், இன்னமும் புரியாதவர்கள் எல்லாரும் அடுத்து சம்பவத்தைப் படிக்கலாம்.

ஒவ்வொரும் மாதமும் என் சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டிற்கு தருவது வழக்கம். அந்த மாதம் சம்பளம் வந்த பிறகும் ஏதோ காரணங்களால் ஏடிஎம் சென்று எடுத்து வர முடியவில்லை. என் அண்ணன் மகளுக்கு நெட் பாங்கிங் முறையில் தான் ஃபீஸ் கட்ட வேண்டும் என்பதால் எனது அக்கவுண்டிலிருந்து கட்டிவிட்டேன். பதிலாக என் அண்ணன், காசை என் கையில் கொடுத்து விட்டான். இந்தப் பணமும், வீட்டிற்கு தரும் பங்கும் ஏறக்குறைய ஒரே அளவுதான். சரி, கத்தையாகப் பணம் வீட்டில் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் அதை எனது அக்கவுண்டில் டெபாஸிட் செய்துவிட்டு, வீட்டிற்கு தேவையான காசை எடுக்கலாம் என முடிவு செய்தேன். பேங்க் புறப்படும் வரை யாரும் எனது முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டவில்லை. 

பேங்கிற்கு சென்று, வரிசையில் நின்று, அக்கவுண்டில் பணத்தை செலுத்திவிட்டு, கீழே வந்து ஏடிஎம் மில் வீட்டிற்காக காசு எடுக்கலாம் என நினைக்கும்போது தான் உறைத்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று !!!

இன்னமும் உறைக்காதவர்கள் எனக்குப் போட்டியாக வரலாம், புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்..  எனக்கும் அந்த விஞ்ஞானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வளவே..