Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - ப.வி


கமல்ஹாசனோட நிறைய படங்கள்ல, அவருக்கு மட்டும் நல்ல பேரு கிடைக்கும். “படம் மொக்கை, ஆனா கமல் பின்னிட்டாரு”னு சொல்லுவாங்க. சூர்யாவும் அப்படிப்பட்ட ஹீரோவாகிட்டாருன்னு நினைக்கறேன். ஆனா, அவரும் கவர்ச்சி நடிகை மாதிரி அடிக்கடி உடம்பை காமிக்கறதை குறைச்சிகிட்டா நல்லா இருக்கும். சூர்யா மாதிரியே படத்துல தென்படற ஒரு ப்ளஸ், வில்லன் ஜானி. மிரட்டிருக்காரு. ஷ்ருதி ஹாசன், முதல் படத்துக்கு பரவாயில்லை. ஆனா மேக்கப் ஜாஸ்தி + தமிழ் கொலை. ரொம்ப சுமாரான மியூசிக், பிண்ணனி இசை, பழக்கப்பட்ட எடிட்டிங்னு கொஞ்சம் tiring.

தமிழன் தமிழன்னு சொல்லியே படத்தை ஓட வெச்சிடலாம்னு நினைச்சாரு போல நம்ம முருகதாஸ். சண்டை காட்சிகள் மகா நீளம். நோக்கு வர்மம்னு சொல்லி சொல்லி, ஒரு கட்டத்துக்கு மேல, யாரு நோக்கு வர்மம்ல திடீர்னு வில்லனா மாறி அடிக்க ஆரம்பிப்பாங்களோன்னு த்ரில்லிங்கா இருக்கு. அழுத்தமில்லாத திரைக்கதைல ஒன்றவே முடியலை. தமிழரோட முயற்சிய குறை சொல்றாங்க, உழைப்ப மதிக்கத் தெரியலை, அது இதுனு பேச்சுக்களும் வரும். அதுக்காக பயந்துகிட்டு படம் சூப்பர்னு சொல்லிடாதீங்க. தமிழர்களை பெருமை படுத்துற எண்ணத்துல இந்தப் படத்தை முருகதாஸ் எடுத்திருக்கலாம். ஆனா சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுவாரசியமா, அழுத்தமா சொல்லிருக்கலாம். முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனா Strictly average - இதை தவிர இந்தப் படத்தை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை.

பி.கு - தெலுங்குல என்னானு டயலாக் பேசுவாங்க?? ஆந்திராலேர்ந்துதான் ஆவக்காய் போச்சுன்னா??

Sunday, October 23, 2011

மற்றும் பல - 23/10/2011

வழக்கம் போல அப்படியே சோம்பேறித்தனத்துல இங்க எதுவும் எழுதாம விட்டுட்டேன். என்னோட பழைய பதிவுகளை கொஞ்சம் பார்க்கலாம்னு நினைச்சா, கடைசியா எழுதின 10 பதிவுகளுமே விமர்சனங்களாவே இருக்கு. சங்கடமா போச்சு. இனிமேலாவது ஒழுங்கா அப்டேட் பண்ண முயற்சி பண்ணனும். தட்டிக் கேட்க ஆள் இல்லாம போச்சுல. அதான்.. :)
-----------------------------------------------------------------------
பிபிசி வேலையை விட்டுட்டேன். என் மேல அக்கறை இருக்கற எல்லாரும் என்னை திட்டியாச்சு. உங்க அக்கறைக்கு நன்றி மக்களே :) ஆனா என்னை புரிஞ்சிகிட்ட யாரும் எதுவும் சொல்லல. அதுவே சந்தோஷமா இருக்கு. பிபிசில வேலை செஞ்ச இந்த ஒரு வருஷம் எப்படி போச்சுனே தெரியலை. எக்கச்சக்க நண்பர்கள், புரிஞ்சிகிட்ட விஷயங்கள், புதுப்புது அனுபவங்கள்னு மிக வேகமான ஒரு வருஷம். நான் எங்கெல்லாம் போக முடியாதுன்னு நினைச்சனோ, யாரையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சனோ, எல்லாமே நடந்துச்சு. (என்னோட facebook ஆல்பம பார்த்தா உங்களுக்கு புரியும் :P) சம்பந்தமே இல்லாத இடங்களுக்கும் போனேன். இந்த முதல் வேலை அனுபவம் கண்டிப்பா என்னோட எல்லா எதிர்கால வேலைகள்லையும் எதிரொலிக்கும்னு நம்பறேன். நன்றி டு பிபிசி :) அடுத்து என்னான்னு கேட்காதீங்க. இன்னும் யோசிச்சிக்கிட்டுதான் இருக்கேன் :) 
-----------------------------------------------------------------------
ராக் ஸ்டார் மற்றும் ரா ஒன் படத்தோட பாடல்கள் கொஞ்சம் ஈர்த்திருக்கு.
முதல்ல
, ராக் ஸ்டார்..... 
படத்துக்கு, ரஹ்மான், சூப்பர்லேடிவா இசை அமைச்சிருக்கர்தா இசை விமர்சகர்கள் நிறைய பேர் சொல்றாங்க. பாடல்கள் நல்லா இருந்தாலும் நம்ம நேட்டிவிட்டி இருந்தாதான ஓட்டும். அது எனக்கு கஷ்டம். டில்லி 6க்கு அப்பறம், ஹிந்தில ரஹ்மானோட பெஸ்ட்டுன்னு சில பேர் சொல்றாங்க. நமக்கு ஒண்ணும் புரியல. என்னதான் இருந்தாலும் ரஹ்மானுக்கு மற்றுமொரு வெற்றிப் படம்.
அடுத்து ரா ஒன் பத்தி சொல்லனும்னா, சம்மக் சல்லோ பாடல் மட்டுமே நிறைய பேரை கவனிக்க வெச்சிருக்கு. அதோட மேக்கிங் வீடியோ பாத்திருப்பீங்க. ஏகான் ஹிந்தி பாடினது ஆச்சர்யம்னா, பாடல்ல தமிழ் வரிகள் இருக்கறது அடுத்த ஆச்சர்யம். ஆனா படத்தோட ட்ரைலர பார்க்கும்போது ஆச்சரியப்பட முடியலை. ஷாருக் ஒவ்வொரு தெரு முனைல நின்னும் படத்துக்கு பிரமோஷன் பண்றாரு. படம் எப்படி இருக்குனு பார்க்கலாம். தலைவர் வேற வராரே.
-----------------------------------------------------------------------
குறுஞ்செய்தி என்கின்ற எஸ்.எம்.எஸ்க்கு கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க மாண்புமிகு ட்ராய். அதுக்கு அவங்க சொல்ற காரணம், டெலி மார்க்கெட்டிங் ஆளுங்களை கட்டுப்படுத்தவாம். அதுக்கு எதுக்கு நம்ம மடில கை வெக்கணும்னு தெரியலைநிறைய பேர் இந்தக் கட்டுப்பாடை ஆதரிக்கறாங்க. தேவையில்லாத  எஸ்.எம்.எஸ் வராதுன்னு. இவ்வளவு கோடி மக்களை கட்டுப்படுத்த முடியரவனுக்கு, நூறு டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளை கட்டுப்படுத்த முடியாதா? இல்லை வேற ஏதாவது காரணங்களாநான் காசு குடுக்கறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு  எஸ்.எம்.எஸ் அனுப்பறதுன்னு நான் முடிவு பண்ணிக்கறேன். இவனுங்க யாரு அதை கட்டுப்படுத்த? இன்னைக்கு இதுல கட்டுப்படுத்தரவனுங்க, நாளைக்கு "நீ இவ்ளோதான் பேசணும், இதுக்கு மேல பேசகூடாது"னு கட்டுப்படுத்தினா?? இதுல ஆச்சர்யம் என்னான்னா, இதுக்கு எதிரா, காதுல விழறா மாதிரி எந்தக் குரலும் வரலை. அவ்வளவு கூடவா யோசிக்க திராணி இல்லாம ஆகிட்டோம்? 
-----------------------------------------------------------------------
ரெண்டு பாட்டுக்காகவே சதுரங்கம் படம் பார்த்தேன். கிளைமேக்சை தவிர படம் சுவாரசியமாத்தான் இருந்துச்சு. சோனியா அகர்வாலைப் பத்தி நிறைய கமெண்ட்ஸ் சொல்லிட்டே படம் பார்த்தோம் நானும் என் நண்பனும். நல்ல வேளை சத்தமா சொல்லலை. பின்னாடி ரோல சோனியாவே உட்கார்ந்திருந்தாங்க. படம் முடிஞ்சா பின்னாடி, வெளிய கரு பழனியப்பன் நின்னுகிட்டு இருந்தாரு. போய் என்ன பேசறதுன்னு தெரியலை. அப்படியே வந்துட்டேன். 
-----------------------------------------------------------------------
முரண் படமும் நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம் யோசிச்சா படத்தோட எல்லா டிவிஸ்டயும் பத்தாம் கிளாஸ் பையனே / பொண்ணே (நான் ஆணாதிக்கவாதி இல்லீங்கோ :P ) கண்டுபிடிக்கறா மாதிரி இருந்துச்சு. பிரசன்னா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. சேரனுக்கு, எதையோ முழுங்கிட்டு வயித்துல சங்கடம் பண்றா மாதிரியான அதே லுக்கை, படம் முழுக்க மெய்ன்டெய்ன் பண்ணாரு. அவருக்கு ஏத்த ரோல். ஆனா, படம் நல்லா ஓடலைன்னு  கேள்விப்பட்டேன். pity. பாட்டு எல்லாம் மொக்கை.